Published : 03 Jan 2021 03:21 AM
Last Updated : 03 Jan 2021 03:21 AM

ஃப்ளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழருக்கான நடுவம்: தனியொருவராக முயற்சிக்கும் தமிழ்ப் பெண் கலைமதி

ஃப்ளோரிடா பல்கலை. பேராசிரியர் கலைமதி.

ஃப்ளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழருக்கான நடுவத்தை நிறுவுவதற்காக தனியொருவராகப் பாடுபட்டு வருகிறார் முனைவர் கலைமதி.

பழம்பெரும் மொழிகளில் ஒன்று தமிழ்.2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு, செம்மொழி என்ற சிறப்பும் கிடைத்துள்ளது. உலகத்துக்கே பொதுமறையான திருக்குறள், ஏராளமான சங்க இலக்கியங்கள், தமிழ்க் காப்பியங்கள் மற்ற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. எனினும் தமிழ் மொழிக்கானசர்வதேச அங்கீகாரம் எந்தளவுக்குக் கிடைத்துள்ளது என்பது கேள்விக்குறியே!

தமிழ் மொழிக்கான இடம் பரவலாக்கப்படாததால், உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள்போதிய அளவில் நடப்பதில்லை என்றும்குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதையடுத்து உலகம் முழுவதும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹார்வர்ட் பல்கலை.யில் அம்முயற்சிக்கு வெற்றியும் கிடைத்துள்ளது.

ஒரேயொரு பேராசிரியர் மூலம் ஏறத்தாழ 10 ஆய்வு மாணவர்களைக் கொண்டு ஆராய்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் மொழிசார்ந்த நிகழ்வுகளை நடத்துவது தமிழ் இருக்கையின் பணி ஆகும். இத்தகைய முயற்சிகளைக் காட்டிலும், தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழருக்கான நடுவத்தை நிறுவி, தமிழின் வீச்சை இன்னும் விசாலப்படுத்தலாம் என்கிறார் முனைவர் கலைமதி.

யார் இவர்?

பழம்பெரும் மலேசிய எழுத்தாளர் தமிழ்க்குயில் கலியபெருமாளின் மகள் கலைமதி.மலேசியாவில் உள்ள அரசுத் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைக் கற்ற கலைமதி, ஃப்ளோரிடா சர்வதேச பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக உள்ளார். தற்போது ஹெர்பர்ட் வெர்டெய்ம் மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வருகிறார். ஏராளமான பல்கலைக்கழகங்களில் கவுரவப் பேராசிரியராகவும் உள்ளார்.

ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் தமிழ்மற்றும் புலம்பெயர் தமிழருக்கான நடுவத்தை உருவாக்கும் தனது முயற்சி குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

செம்மொழியான தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை சர்வதேச அளவில் பெற்றுத் தருவதே என்னுடைய குறிக்கோள். புலம்பெயர்ந்த தமிழ் மாணவர்கள் தமிழைக் கற்கஉதவுவது, தலைசிறந்த பல்கலைக்கழங்களில் தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த உயர் ஆய்வுகளை மேற்கொள்வது, தொடர் ஆய்வுகளின் மூலம் ஆய்வுத் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட பணிகளை இந்த நடுவம் மேற்கொள்ளும். இதன்மூலம் தமிழ் மற்றும் தமிழரின் மதிப்பு சர்வதேச அரங்கில் உயரும்.

இந்த நடுவத்தில் 10 பேராசிரியர்கள், 1 மூத்த பேராசிரியர், 1 இளநிலைப் பேராசிரியர் மற்றும் ஏராளமான முனைவர் ஆராய்ச்சியாளர்கள் பங்கு பெறுவர். முதுகலை, இளங்கலை மாணவர்களுக்கும் நடுவத்தில் இடம்உண்டு. ஆண்டுதோறும் தமிழார்வம் கொண்டஅறிஞர்கள், பேராசிரியர்கள் பரிமாற்றம், வள்ளுவர் மற்றும் வள்ளலார் படிப்பு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடுகள், தமிழர்களின் பாரம்பரியக் கலைகள், மாணவர்களுக்கான உதவித்தொகை, முனைவர் பட்டம் பெற்ற நபருக்கான ஆராய்ச்சி விருது, தமிழ்ப் பெண்தொழில்முனைவோருக்கான விருது ஆகியவை இந்த நடுவத்தின் செயல்பாடுகளில் அடங்கும்.

இதற்கு முதற்கட்டமாக 1 லட்சம் டாலர்தேவைப்படுகிறது. தொன்மையான தமிழ்மூலம் நம் மரபை மீட்டெடுக்க விரும்புபவர்கள் நன்கொடை அளிக்கலாம். மொழி, கலை,கலாச்சாரம் பற்றிய ஆய்வு செழித்து வளரவும், வருங்காலச் சந்ததியினருக்கு தமிழைப் பாதுகாத்து அளிக்கவும் உங்களுடைய அன்பும் ஆதரவும் அவசியம் தேவை.

இவ்வாறு கலைமதி கூறினார்.

தமிழ் மற்றும் புலம்பெயர்த் தமிழருக்கான நடுவம் குறித்து மேலும் அறிய: https://give.fiu.edu/areas-of-giving/campaigns/tamilarstudiesinitiative/index.html

தொடர்புக்கு: Kalai.Mathee@fiu.edu

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x