Published : 02 Jan 2021 03:23 AM
Last Updated : 02 Jan 2021 03:23 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஜன.4 முதல் 2-ம் கட்ட கலந்தாய்வு

சென்னை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 4-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கடந்த நவ.18-ம் தேதி தொடங்கியது.

சிறப்பு பிரிவு, பொதுப் பிரிவு, இடஒதுக்கீடு பிரிவு கலந்தாய்வு டிச.10-ம் தேதி வரையும், தனியார்கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு டிச.10-ம்தேதி தொடங்கி 23-ம் தேதி வரையும் நடந்தது.

இந்நிலையில், 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 4-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. 5-ம் தேதி முதல் 11-ம் தேதி நண்பகல் வரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், 11-ம் தேதி பிற்பகல் முதல் 13-ம் தேதி வரை நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

இந்த கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்கள், முதல்கட்ட கலந்தாய்வில் அனுமதி கடிதம் பெற்று கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் முதல்கட்ட கலந்தாய்வில் காலியாகவுள்ள இடங்கள் நிரப்பப்படவுள்ளன.

அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப கிடைத்துள்ள 148 இடங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x