Published : 31 Dec 2020 04:29 PM
Last Updated : 31 Dec 2020 04:29 PM

தொல்லியல் அலுவலர் பதவியில் தமிழக மாணவர்கள் புறக்கணிப்பா?- டிஎன்பிஎஸ்சி மறுப்பு

தொல்லியல் அலுவலர் பதவியில் தமிழக மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட 18 தொல்லியல் அலுவலர் பதவிகளுக்கான தேர்வில் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

தொல்லியல் அலுவலர் பதவிகளுக்கான தேர்வு 29.02.2020 அன்று நடத்தப்பட்டு, 29.12.2020 அன்று தேர்வாணையத்தில் நடைபெற்ற கலந்தாய்வு மூலம் அனைத்துப் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன.

இப்பதவிக்கான கல்வித் தகுதியாக முதுகலை தமிழ், வரலாறு, தொல்லியல் படிப்புகள் மற்றும் தொல்லியலில் முதுகலைப் பட்டயப் படிப்புடன் இளங்கலையில் தமிழை ஒரு பாடமாகக் கட்டாயமாகப் படித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்வு எழுதிய மாணவர்களின் கல்வித் தகுதி, இட ஒதுக்கீடு, போட்டித் தேர்வு மதிப்பெண்கள், மூலச் சான்றிதழ்களைச் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு பெற்ற 18 மாணவர்களும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதேபோல 18 பேரில் இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் ஒரு பணியிடத்துக்கு அருந்ததிய மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

எனவே, தமிழக மாணவர்களைப் புறக்கணிப்பதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது ஆகும்''.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x