Published : 30 Nov 2020 12:51 PM
Last Updated : 30 Nov 2020 12:51 PM

மாதந்தோறும் உதவித்தொகை: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

மாதந்தோறும் உதவித்தொகை பெறும் வகையில் பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும்.

பள்ளிகளில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்சிஇஆர்டி நடத்தும் இந்தத் தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாகத் தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும்.

மாதந்தோறும் உதவித்தொகை

தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு மூலம் மொத்தம் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது மாதம்தோறும் ரூ.1,250-ம், அதன்பிறகு இளங்கலை, முதுகலை பட்டப் படிப்பு படிக்கும்போது மாதம்தோறும். ரூ.2,000-ம் வழங்கப்படும். மேலும், பி.எச்டி. படிப்புக்கும் உதவித்தொகை பெறலாம்.

இந்நிலையில் 2020- 2021 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTSE) விண்ணப்பிக்கலாம்.

இதற்கு 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள், தங்களின் விண்ணப்பங்களை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய கால அவகாசம் இன்றுடன் (நவ.30) நிறைவடைகிறது.

இதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட மாட்டாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x