Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை: அரசு தேர்வுகள் இயக்ககம் விளக்கம்

சென்னை

கரோனா பரவல் காரணமாக 2019-20 கல்வி ஆண்டில் 10, 11-ம்வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சியும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2020-21 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு, இணையவழியில் வகுப்புகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, பொதுத் தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில், இணையவழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12-ம்வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு 2021 ஜூன் மாதம்தான் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான அட்டவணையை அரசிடம் அரசு தேர்வுகள் இயக்ககம் சமர்ப்பித்துள்ளதாகவும் தனியார் தொலைக்காட்சி சேனல்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககத்தின் மூத்த அதிகாரிகளிடம் கேட்டபோது, “நடப்பு கல்வி ஆண்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பள்ளிகள் திறந்த பிறகுதான், தேர்வு நடத்துவது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்க முடியும். எனவே, சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர்தான் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று வெளியான செய்தியில் எந்த உண்மையும் இல்லை’’ என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x