Published : 06 Nov 2020 05:54 PM
Last Updated : 06 Nov 2020 05:54 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு சட்டம்: அரசிதழில் வெளியீடு

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதையடுத்து, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். இதற்கிடையே கடந்த செப்டம்பரில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உள் இட ஒதுக்கீட்டுக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி அக்.29-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மசோதாவுக்கு ஆளுநர் அடுத்த நாளே (அக்.30) ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், சட்டத்தை உறுதிப்படுத்தும் விதமாக 7.5% உள் இட ஒதுக்கீட்டுச் சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இட ஒதுக்கீடு முழுமையான செயல்வடிவம் பெற்றுள்ளது. இதனால் மருத்துவக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் எவ்விதத் தடங்கலும் இன்றிக் கலந்துகொள்ள முடியும்.

இந்த உள் இட ஒதுக்கீட்டின்படி 3,650 அரசு இடங்களில் 227 இடங்களும், தனியார் இடங்களில் 77 இடங்களும் அளிக்கப்படும். இதன்மூலம் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்குத் தனி உள் இட ஒதுக்கீடாக மொத்தம் 304 இடங்கள் வழங்கப்பட உள்ளன.

மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் நவம்பர் 16-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x