Last Updated : 02 Nov, 2020 01:01 PM

 

Published : 02 Nov 2020 01:01 PM
Last Updated : 02 Nov 2020 01:01 PM

வருங்காலத்துக்கான முன்னோட்டம்: டிஜிட்டல் கல்வி முறையை அறிமுகம் செய்த வேளாண்மைப் பல்கலைக்கழகம்

கோவை

கரோனா காலத்தில் தொற்று அச்சம் காரணமாகக் கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் டிஜிட்டல் கல்வி முறைக்கு மாறவுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் கூறியதாவது:

''கரோனா காலத்தில் வேளாண்மை மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்பப் படிப்புகளை மாணவர்களுக்குப் பாதுகாப்புடன் வழங்க, மின்னணு கணிப்பொறிப் பலகை மூலமாக நேரடியாகவோ, இணையதளம் மூலமாகவோ கற்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி டிஜிட்டல் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் செக்யூர்டு டிஜிட்டல் பேடு மூலமாக மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து, தேர்வுகளை நடத்தி மதிப்பீடு செய்யும் கல்வி முறை தொடங்கப்படுகிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய உயர்கல்வித் திட்ட, நிதி நிறுவன வளர்ச்சி நிதியுதவியுடன் நடத்தப்படும் இப்பயிற்சியில் முதற்கட்டமாக பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 28 ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பயிற்சி பெற்று மாணவர்களைத் திறம்பட வழிநடத்த வேண்டும்.

இதன் மூலம் மாணவர்கள் நோட்டுப் புத்தகத்தைப் போல பாடங்களைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்ளலாம். தேர்வின் போது அவற்றை எடுத்துப் படித்துக் கொள்ளலாம். இணைய வழியில் தேர்வெழுதுவதற்கும் இந்த டிஜிட்டல் பேடு உதவும். இதற்குத் தட்டச்சு தெரிய வேண்டிய அவசியமில்லை.

இந்த பேடில், எழுதும் பேனாவைக் கொண்டு எழுதினாலே அது தட்டச்சு வடிவில் மாறிவிடும். வருங்காலத்தில் டிஜிட்டல் முறையில் பாடம் கற்பதற்கு இது முன்னோட்டமாகும்''.

இவ்வாறு துணைவேந்தர் குமார் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x