Published : 27 Oct 2020 06:43 PM
Last Updated : 27 Oct 2020 06:43 PM

தொழில்நுட்பக் கோளாறால் நீட் மருத்துவக் கலந்தாய்வு தள்ளிவைப்பு

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு இன்று (அக்.27) தொடங்குவதாக இருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2020 - 21 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதாரச் சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) ஆன்லைனில் நடத்துகிறது.

நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் முதல்கட்டக் கலந்தாய்வுக்கு அக்.27-ம் தேதி (இன்று) முதல் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக் கலந்தாய்வு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிஎச்எஸ் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''2020 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளை (அக்.28-ம் தேதி) வரை தள்ளி வைக்கப்படுகிறது. இதுகுறித்த புதிய தகவல்கள் www.mcc.nic.in என்ற இணையதளம் மூலமாக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

தொடர்ச்சியான தகவல்களுக்கு மாணவர்கள் எம்சிசி இணையதளத்தைக் காணலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x