Last Updated : 23 Oct, 2020 02:21 PM

 

Published : 23 Oct 2020 02:21 PM
Last Updated : 23 Oct 2020 02:21 PM

வேளாண்மைப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: திருவண்ணாமலை மாணவர் முதலிடம்

இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்ட துணைவேந்தர் என்.குமார்.

கோவை

இளநிலை வேளாண்மைப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில், திருவண்ணாமலை மாணவர் முதலிடம் பிடித்தார்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில், தமிழகத்தில் 14 உறுப்புக் கல்லூரிகளும் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.

இக்கல்லூரிகளில் பி.எஸ்சி. வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல், பட்டு வளர்ப்பு, வேளாண் வணிக மேலாண்மை, பி.டெக். வேளாண்மைப் பொறியியல், உயிரி தொழில்நுட்பம், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், உணவுத் தொழில்நுட்பம் ஆகிய 10 இளநிலைப் பட்டப்படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படிப்புகளின் முதலாமாண்டில் உறுப்புக் கல்லூரிகளில் 1,600 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 3,100 இடங்களும் என மொத்தம் 4,700 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை 2020-2021 ஆம் கல்வியாண்டில் நிரப்புவதற்காகக் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அக். 5-ம் தேதி வரை www.tnauonline.in என்ற இணையதளம் வழியாக வரும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, 48,420 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.குமார் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.

199.50 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற திருவண்ணாமலை மாணவர் பிரவீன்குமார் முதலிடமும், 199.25 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற பெரம்பலூர் மாணவர் கிரிவாசன் இரண்டாமிடமும், 199 மதிப்பெண் பெற்ற ராசிபுரம் மாணவி புஷ்கலா மூன்றாமிடமும் பெற்றனர்.

இது குறித்து டீன் எம்.கல்யாணசுந்தரம் கூறும்போது, 'சிறப்பு பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் வரும் அக். 28-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு விவரம் பின்னர் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும்' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x