Published : 17 Oct 2020 06:58 AM
Last Updated : 17 Oct 2020 06:58 AM

சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ வழிகாட்டி நிகழ்ச்சி; பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வின் நடைமுறைகள்: மாணவர் சேர்க்கை செயலர் டி.புருசோத்தமன் விளக்கம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வின் நடைமுறைகள், மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து சவீதா இன்ஜினீயரிங் காலேஜ் உடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்சேர்க்கை செயலர் டி.புருசோத்தமன் விளக்கம் அளித்தார்.

சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், ‘இந்து தமிழ் திசை’ சார்பில் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற ஆன்லைன்வழிகாட்டி நிகழ்ச்சி கடந்த 15-ம்தேதி நடந்தது. இதில், பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர்டாக்டர் டி.புருசோத்தமன் கூறியதாவது:

பொறியியல் மாணவர் சேர்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தற்போது நடந்துவருகிறது. இது 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்று நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறைகள் தொடர்பான அனைத்து விவரங்களும் இணையதளத்தில் (www.tneaonline.org) விரிவாகவும், வீடியோ வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆன்லைன் கலந்தாய்வை பொறுத்தவரை, 3 முக்கிய நிலைகள்உள்ளன. கலந்தாய்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்துவது முதல் நிலை. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1,000, மற்றவர்கள் ரூ.5,000 செலுத்த வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமாக இதை ஆன்லைனிலேயே செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாதவர்கள் ‘Secretary TNEA, Chennai’ என்ற பெயரில் டிமாண்ட் டிராஃப்ட் எடுத்து, மாவட்டத்தில் செயல்படும் பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தில்கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம்.

கலந்தாய்வு கட்டணம் பின்னர் மாணவர்கள் சேரும் பொறியியல் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு, அவர்களது கல்விக் கட்டணத்தில் கழிக்கப்படும். இதைத் தொடர்ந்து 2-வதுநிலையில், மாணவர்கள் தாங்கள்சேரவிரும்பும் கல்லூரி, பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.ஒருவர் எத்தனை விருப்பமும்கொடுக்கலாம். இதற்கும் 2 நாள்உண்டு. 2-ம் நாள் மாலை 5 மணிக்குள் விருப்பத்தை தெரிவித்து, ‘லாக்’ செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மாலை 5 மணிக்கு விவரங்கள் தானாகவே ‘லாக்’ ஆகிவிடும்.

அடுத்து 3-வது நிலை. மறுநாள்காலை தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் அனுப்பப்படும். இதை மாணவர்கள் உறுதிசெய்ய 2 நாட்கள் தரப்படும். ஒருவேளை, மாணவர்களின் முதல் விருப்பக் கல்லூரி, பாடப் பிரிவு கிடைத்திருக்கலாம். அல்லது விருப்பத்தில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு கல்லூரியும், பாடப் பிரிவும் ஒதுக்கப்பட்டிருக்கலாம். போதிய விருப்ப பட்டியல் தரப்படாவிட்டால் எந்த கல்லூரியும், எந்த பாடப் பிரிவும் ஒதுக்கப்படாமல் இருக்கலாம்.மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் விருப்பங்களை குறிப்பிட்டிருந்தால் கண்டிப்பாக ஏதேனும் ஒரு கல்லூரியும், பாடப் பிரிவும் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஒதுக்கப்பட்ட கல்லூரியை உறுதிசெய்வதுதான் இந்த நிலையில் மிகவும் முக்கியமானது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியை ஏற்று, வேறு கல்லூரி கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் அதற்குவிருப்பம் தெரிவிப்பது, ஒதுக்கப்பட்ட கல்லூரியை நிராகரித்துவிட்டு, அடுத்த சுற்று கலந்தாய்வில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிப்பது, கல்லூரியை நிராகரித்துவிட்டு கலந்தாய்வில் இருந்தே விலகுவது என இப்படி பல வாய்ப்புகள் (choices) கொடுக்கப்படும். அதில் ஒன்றை தேர்வுசெய்து, உறுதிசெய்ய (Confirm) வேண்டியது அவசியம்.

இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட கல்லூரியை ஏற்றுக்கொண்ட மாணவர்களுக்கு மறுநாள் காலை நிரந்தர ஒதுக்கீட்டு ஆணை ஆன்லைனில் அனுப்பப்படும். அவர்கள்அதை பதிவிறக்கம் செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சமர்ப்பித்து சேர்ந்துகொள்ளலாம்.

மாணவர்கள் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்ததுபோல, கலந்தாய்வுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். ஆன்லைன்கலந்தாய்வின்போது பொறுமையுடன் நன்கு யோசித்து, பிடித்தமான கல்லூரி, பிடித்த பாடப் பிரிவை தேர்வு செய்ய வேண்டும். கலந்தாய்வில் குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய நடைமுறைகளை சரியாக செய்வது அவசியம்.

இவ்வாறு புருசோத்தமன் கூறினார்.

சென்னை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ் எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் துறை பேராசிரியை டாக்டர் சி.ஷீபா ஜாய்ஸ் கூறும்போது, ‘‘எங்கள் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு, வேளாண் பொறியியல், கெமிக்கல் இன்ஜினீயரிங் உட்பட 12 விதமான பாடப் பிரிவுகளில் இளநிலை பொறியியல் படிப்புகளை வழங்குகிறோம். இவை தவிர, முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்பிஏ படிப்பும்உள்ளன. பொறியியல் படிக்கும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான பாடப் பிரிவுகளை எந்த செமஸ்டரிலும் தேர்வு செய்துகொள்ளலாம் என்பது எங்கள் கல்லூரியின் சிறப்பு அம்சங்களில் ஒன்று. இதன்மூலம் இறுதி ஆண்டு புராஜெக்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கலாம். விரும்பினால் கலை, பாரம்பரியம் உள்ளிட்ட இதர பாடங்களையும் தேர்வு செய்து படிக்கலாம். மாணவர்களுக்கு முதல் ஆண்டில் இருந்தே தொழில்நுட்பத் திறன், தகவல் தொடர்புத் திறன் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளை அளிக் கிறோம்’’ என்றார்.

நிகழ்வின் நிறைவாக, சவீதாஇன்ஜினீயரிங் காலேஜ் அஸோசியேட் டீன் மற்றும் இசிஇ துறை துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சி.ஷீபா ஜாய்ஸ், கோவை  ஈஸ்வர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சுதா மோகன்ராம் ஆகியோர் தங்கள் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளின் சிறப்புகள், புராஜெக்ட் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவது தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்வை கோவை  ஈஸ்வர் பொறியியல் கல்லூரி இணைந்து வழங்கியது. இந்தஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை‘இந்து தமிழ் திசை’ சர்குலேஷன் பிரிவு பொது மேலாளர் டி.ராஜ்குமார் நெறிப்படுத்தினார். இந்தநிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://bit.ly/34XGGeq என்ற யூ-டியூப் லிங்க்கில் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x