Last Updated : 13 Oct, 2020 01:03 PM

 

Published : 13 Oct 2020 01:03 PM
Last Updated : 13 Oct 2020 01:03 PM

மிசோரம், பஞ்சாப்பில் பள்ளிகள் மீண்டும் திறப்பு; அரசுகள் அறிவிப்பு

மிசோரம், பஞ்சாப்பில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கரோனா ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, அக்.15-ம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று செப்.30-ம் தேதி தெரிவித்தது. கல்வி நிறுவனங்களில் உரிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.16 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநிலப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஜேம்ஸ் லால்ரின்ச்சனா பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''கல்வித்துறை அமைச்சர், மத்திய இளைஞர் மிசோ அமைப்பு, மாணவர் அமைப்புகள், பெற்றோர், கல்வியாளர்கள் ஆகியோருடன் கலந்துபேசியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி மிசோரம் மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்.16 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். ஆசிரியர்கள், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக வெளியிடப்பட்டுள்ளன'' என்று தெரிவித்தார்.

இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் அக்.15-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் படிப்படியாகத் திறக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பெற்றோரிடம் அனுமதி பெற்றுப் பள்ளிக்கு வரலாம். வருகைப் பதிவேடு கட்டாயம் கிடையாது. ஆன்லைன் வகுப்புகளை நடத்த அதிகம் ஊக்குவிக்கப்படும்.

அதேபோல அக்.15-ம் தேதிக்குப் பிறகு உயர்கல்வி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு முதுகலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், கல்லூரி ஆய்வகப் பணிகளுக்காக வர அனுமதிக்கப்படுவார்கள்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x