Published : 10 Oct 2020 09:08 PM
Last Updated : 10 Oct 2020 09:08 PM

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து: துணைவேந்தர் மத்திய அரசுக்குக் கடிதம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் குறித்து துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

உயர்கல்வி நிறுவனங்களை சர்வதேச அளவில் மேம்படுத்த ‘உயர் சிறப்பு கல்வி நிறுவனம்’ என்ற திட்டத்தை மனிதவளத் துறை அமைச்சகம் 2017-ல் கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின்படி, தலா 10 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு ரூ.1,000 கோடி நிதியுதவியும் தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் சில சலுகைகளும் வழங்கப்படும். அதன்படி, சென்னை ஐஐடி, வேலூர் விஐடி உட்பட தலா 8 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் உயர் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர மாநில உயர் கல்வி நிறுவனங்களான அண்ணா பல்கலைக்கழகமும் மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளன. எனினும், மாநில அரசின் நிதி பங்கீடு இழுபறியால் சிறப்பு அந்தஸ்து கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

சிறப்பு அந்தஸ்து பெறும் மத்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கு முழு நிதியை மத்திய அரசே வழங்கும். மாநில உயர்கல்வி நிறுவனங்களுக்கு 75:25 விகிதத்தில் நிதியை மத்திய, மாநில அரசுகள் பங்கிட வேண்டும். அதாவது ஆயிரம் கோடி ரூபாயில் மாநில அரசு ரூ.250 கோடி நிதியை அளிக்க வேண்டும். ஆனால், நிதிச் சிக்கலாலும் இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என்ற அச்சத்தாலும் தமிழக அரசு ஒப்புதல் வழங்காமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் ''5 ஆண்டுகளில் ரூ.1,500 கோடியை அண்ணா பல்கலைக்கழகத்தால் உருவாக்க முடியும். எனவே மாநில அரசின் நிதிப் பங்கீடு இல்லாமலேயே பல்கலைக்கழகத்தால் சமாளிக்க முடியும். இதனால் உயர் சிறப்பு அந்தஸ்தை அளிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து முடிவெடுக்க அமைக்கப்பட்டுள்ள அமைச்சர் குழுவின் ஒப்புதலுக்காகப் பல்கலைக்கழகம் காத்திருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x