

தேசிய கல்விக் கொள்கை குறித்த மாணவர்களின் கேள்விகளுக்கு அக்.1-ம் தேதி, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளிக்க உள்ளார். அவரின் ட்விட்டர் மற்றும் அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நேரலைக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் செப்டம்பர் 1-ம் தேதி நாள் முழுவதும் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
அந்நிகழ்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அக்டோபர் 1-ம் தேதி அன்று ட்விட்டர் மற்றும் அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த நேரலைக் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் #NEPTransformingIndia என்ற ஹேஷ்டேகுடன் அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் தங்களின் கேள்விகள், சந்தேகங்களை முன்வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.