Last Updated : 21 Sep, 2020 07:57 AM

 

Published : 21 Sep 2020 07:57 AM
Last Updated : 21 Sep 2020 07:57 AM

கரோனா காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு இயக்கம்: கும்மிடிப்பூண்டியில் செயல்படுத்தும் தனியார் நிறுவன அதிகாரி 

கும்மிடிப்பூண்டியில் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர், கரோனா ஊரடங்கு காலத்தில் வீடுகளில் அடைப்பட்டிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தன் வீட்டில் வாசிப்பு இயக்கம் நடத்தி வருகிறார்.

கடந்த 5 மாதங்களுக்கு மேலாககரோனா தடுப்பு ஊரடங்கு மாணவர்களை வீடுகளில் அடைத்துள்ளது. அப்படி அடைப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்காக, கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளரான ஜெய நாராயணா, தன் வீட்டு வளாகத்தில் வாசிப்பு இயக்கம் நடத்தி வருகிறார்.

இதுகுறித்து, ஜெய நாராயணா தெரிவித்ததாவது:

கரோனா காலத்தில் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் அரசுப் பள்ளிமாணவ – மாணவிகள் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் கடந்த 3 மாதங்களாக வாசிப்பு இயக்கம் நடத்தி வருகிறேன்.

நாள்தோறும் காலை 7 மணி முதல் 8.30 மணிவரை நடைபெறும் இந்த இயக்கத்தில், எங்கள் தெரு மாணவர்கள், கும்மிடிப்பூண்டியை அடுத்த வழுதலம்பேடு கிராம மாணவ - மாணவிகள் பங்கேற்கின்றனர்.

இம்மாணவர்களுக்கு ‘இந்து தமிழ்’, ‘தி இந்து’ உள்ளிட்ட நாளிதழ்களுடன் பாரதி, தமிழ்ஒளி கவிதைகளையும் அறிமுகம் செய்கிறேன். இந்த இயக்கம் தொடங்கிய இரு வாரங்களிலேயே மாணவர்களுக்கு வாசிப்பின் மீது பற்று வரத் தொடங்கி அவர்களும் தங்கள் வீடுகளில் உள்ள பழைய வார இதழ்களை வாசிப்பு இயக்கத்துக்கு கொண்டுவரத் தொடங்கிவிட்டனர்.

பொதுஅறிவு, சிறுவர் கதைகள் தொடர்பாக நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்று வாசித்து வருகின்றனர். தன்னார்வம் கொண்ட தமிழாசிரியர் ஒருவர், வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு திருக்குறளில் இருக்கும் வாழ்க்கை நெறிகளை கற்பிக்கிறார். கல்லூரி மாணவர்கள் மூலம் கணிதமும் கற்பிக்கப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் நடைபெறும்
இந்த வாசிப்பு இயக்கத்தை நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு வாரம் 3 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x