Published : 19 Sep 2020 09:04 PM
Last Updated : 19 Sep 2020 09:04 PM
பொறியியல் இறுதிப் பருவத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கல்லூரி மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் ஆகஸ்ட் 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப். 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் முடிவடைகின்றன. தியரி பாடங்கள் 24-ம் தேதி தொடங்குகின்றன.
இந்நிலையில் தேர்வு குறித்த வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதில்,
* மடிக்கணினி / ஸ்மார்ட் போன் / டேப்லெட் / போன்ற சாதனங்களில் தேர்வுகளை எழுதலாம். மின்சாரம் குறைந்தது 2 மணி நேரம் நீடிக்கும் வகையில் அவற்றை முன்கூட்டியே சார்ஜ் செய்ய வேண்டியது அவசியம்.
* தேர்வு எழுதும் உபகரணம் தொடர்ச்சியான இணைய இணைப்பைக் கொண்டிருக்க வேண்டும். இணைய வேகம் குறையாமல் இருக்கத் தேர்வெழுதும்போது இணையத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
* ஆன்லைன் தேர்வின்போது, போதுமான வெளிச்சம் உள்ள மூடிய அறையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஜன்னலுக்கு எதிரே அல்லது அருகில் உட்கார வேண்டாம்.
* மாணவர்கள் தேர்வு ஆரம்பிக்கக் குறைந்தது 10 நிமிடங்களுக்கு முன்னதாக தேர்வு போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.
* தேர்வின் மொத்த நேரம் 1 மணி நேரம் (60 நிமிடங்கள்) ஆகும்.
என்பன போன்ற ஏராளமான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து முழுமையாக அறிய: https://www.annauniv.edu/pdf/Candidate%20User%20Manual-UD%20(1).pdf
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT