Published : 15 Sep 2020 02:13 PM
Last Updated : 15 Sep 2020 02:13 PM

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்தக்கூடாது: உயர் கல்வித்துறை உத்தரவு

தமிழக அரசின் அனுமதி பெற்ற பிறகே இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழகங்களுக்கு உயர் கல்வித்துறைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கல்லூரியில் 1, 2, 3-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பருவத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், கடந்த கல்வி ஆண்டின் ஏப்ரல் - மே பருவத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள அனைத்து மாணவர்களும் (அரியர் பாடங்கள் உட்பட) தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதி ஆண்டு மாணவர்கள் பருவத் தேர்வுகளைக் கட்டாயம் எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செப்.30-ம் தேதிக்குள் பருவத் தேர்வுகளை நடத்தப் பல்கலைக்கழகங்கள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் உயர் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா ஐஏஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசு அனுமதி பெற்ற பிறகே இறுதிப் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, தேர்வுக்குக் கட்டணம் செலுத்திய அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி அளித்தது குறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுதே, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் அரியர் மாணவர்களுக்குத் தேர்ச்சி வழங்கிய தமிழக அரசின் முடிவு தவறானது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x