Published : 12 Sep 2020 06:56 AM
Last Updated : 12 Sep 2020 06:56 AM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: உயர்கல்வித் துறை அரசாணை

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தேவையுள்ள பாடப் பிரிவுகளுக்கு 20 சதவீத கூடுதல் இடங்களுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

மாணவர்கள் நலன் கருதி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கிராமங்கள், நகராட்சிகளில் இருந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். இந்த மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில்கல்வி பயில சிரமப்படுகின்றனர்.

எனவே, மாணவர்களின் நலன்கருதி 2020-21-ம் கல்வி ஆண்டில்தேவையுள்ள கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதமும், அறிவியல்பாடப்பிரிவுகளுக்கு ஆய்வகவசதிக்கு ஏற்ப 20 சதவீதமும் கூடுதல் இடங்கள் வழங்க அனுமதிஅளிக்க வேண்டும் என்று கல்லூரிகல்வி இயக்குநர், உயர்கல்வித் துறைக்கு கோரிக்கை வைத்தார்.

அதை பரிசீலனை செய்து,அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதமும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீதமும் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு, கல்லூரிகள், தாங்கள் சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசின் அறிவிப்பு மூலம் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 15 ஆயிரம் முதல் 17 ஆயிரம் வரை கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால், கலந்தாய்வில் கலந்து கொள்ளும் 74 சதவீத மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கக் கூடும்.

தனியார் கல்லூரிகள் கோரிக்கை

தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கும் அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, தங்களுக்கும் கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தனியார் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x