Last Updated : 10 Sep, 2020 01:19 PM

 

Published : 10 Sep 2020 01:19 PM
Last Updated : 10 Sep 2020 01:19 PM

நீட் தேர்வர்களுக்காகச் சிறப்பு மெட்ரோ ரயில்கள்: மேற்கு வங்கம் அறிவிப்பு

கொல்கத்தா

நீட் தேர்வர்களுக்காகச் சிறப்பு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிஹார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோதும் திட்டமிட்டபடி ஜேஇஇதேர்வுகள் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்கி, 6-ம் தேதி முடிவடைந்தன.

அதேபோல நீட் தேர்வு செப்.13-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கிடையே மேற்கு வங்கத்தில் தேர்வெழுத மையங்களுக்குச் சென்ற ஜேஇஇ தேர்வர்கள் கடுமையான மழை மற்றும் குறைவான போக்குவரத்து வசதியால் சிரமப்பட்டனர். அம்மாநில அரசு அதிகாலை 5 மணியில் இருந்தே பேருந்து சேவைகளைத் தொடங்கி இருந்தது. எனினும் வடக்கு 24 பர்கானாஸ், பெர்ஹாம்பூர், மால்டா மற்றும் சிலிகுரி பகுதியைச் சேர்ந்த தேர்வர்கள் பேருந்து கிடைப்பதில் சிரமங்களை எதிர்கொண்டனர். உள்ளூர் ரயில் போக்குவரத்துச் சேவை இல்லாதது அவர்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நீட் தேர்வர்களுக்காகவும் அவர்களின் பாதுகாவலர்களுக்காகவும் சிறப்பு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மெட்ரோ ரயில்வே செய்தித்தொடர்பாளர் இந்திராணி பானர்ஜி கூறும்போது, ''மருத்துவ நுழைவுத் தேர்வை முன்னிட்டு செப்.13-ம் தேதி மட்டும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். தேர்வர்கள், தங்களின் நீட் அனுமதிச் சீட்டைக் காண்பித்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்குள் செல்லலாம்.

அவர்களுக்கு அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகள் வழங்கப்படும். தேர்வர்கள் செப்.13-ம் தேதி காலை 11 மணி முதல் 7 மணி வரை பயணிக்கலாம். நொயாபரா மற்றும் கவி சுபாஷ் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இரண்டு புறங்களிலும் இருந்து தலா 33 ரயில்கள் என 66 ரயில்கள் இயக்கப்படும். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை ரயில் இயக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x