

பொறியியல் கல்லூரிகள் பற்றி பேசும்போது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவைப் (All India Council for Technical Education - AICTE) பற்றிப் பேசாமல் இருக்க முடியுமா? பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஓர் உயரிய அமைப்புதான் ஏ.ஐ.சி.டி.இ.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பல பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு, நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி செய்யவும் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வசதிகளை ஒருங்கிணைக்கவும் ஓர் அமைப்பு தேவைப்பட்டது. அதன்படி ஆலோசனை கூறும் ஓர் அமைப்பாக 1945-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதுதான் ஏ.ஐ.சி.டி.இ. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர் கல்வித்துறையில் ஒன்றாக இந்த அமைப்பு செயல்படத் தொடங்கியது.
இந்தியாவில் பொறியியல், தொழில்நுட்பம், கட்டுமானக்கலை, நகரமைப்பு, விடுதி மேலாண்மை, உணவுத் தொழில்நுட்பம், பயன்பாட்டுக் கலை, தொழில், கணிப்பொறி பயன்பாடு குறித்த தொழிற்கல்விப் பாடங்களுக்கு அனுமதி வழங்கும் அமைப்பாக ஏ.ஐ.சி.டி.இ. இயங்கிவருகிறது.
1986-ம் ஆண்டில் இந்தியாவில் தேசியக் கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. அதன் பிறகு இந்த அமைப்பு தனி அதிகாரமுள்ள அமைப்பாக மாற்றப்பட்டது. தொழில்நுட்பக் கல்வி தொடர்பான பல பரிமாணங்களை சர்வே எடுத்து அதுதொடர்பான தரவுகளைச் சேகரிப்பது, நாட்டின் தொழில்நுட்பக் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாய் இருப்பது, தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை ஊக்குவிப்பது, புதிதாக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் மேம்பாட்டுக்கு உதவுவது, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் நலிவுற்றவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியை வழங்குவதற்கான விதிமுறைகளை வகுப்பது போன்ற முக்கியப் பணிகளை ஏ.ஐ.சி.டி.இ. மேற்கொண்டு வருகிறது.
இதேபோல கல்விக் கட்டணம், கல்வி தொடர்பான பிற கட்டணங்களை நிர்ணயித்து வசூலிப்பதற்கான விதிமுறைகளை வகுப்பது, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்குத் தன்னாட்சி வழங்குவது தொடர்பான நடைமுறை விதிகளை உருவாக்குவது, தொழில்நுட்பக் கல்வி வணிகமயமாவதைத் தடுப்பது, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் தரத்தைச் சோதனையிடுவது, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவது போன்ற பணிகளையும் ஏ.ஐ.சி.டி.இ. செய்து வருகிறது. ஒட்டுமொத்தமாகத் தொழில்நுட்பக் கல்வியின் வளர்ச்சி மற்றும் மேலாண்மையை ஒருங்கிணைக்கும் பணியைச் செய்யும் அமைப்பாக இது 1987-ம் ஆண்டில் உருவெடுத்தது.
இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் டெல்லியில் செயல்பட்டு வருகிறது. 1995-ம் ஆண்டில் இந்த அமைப்பின் மண்டல அலுவலகங்கள் பிற நகரங்களில் ஏற்படுத்தப்பட்டன. இதன்படி கொல்கத்தா, சென்னை, கான்பூர், மும்பை ஆகிய நகரங்களில் மண்டல அலுவலகங்கள் உருவாயின. பிறகு பெங்களூரு, போபால், சண்டிகர், ஹைதராபாத் ஆகிய நகரங்களிலும் மண்டல அலுவலகங்கள் விரிவுபடுத்தப்பட்டன. சென்னையில் உள்ள தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் அடங்கியுள்ளன.
தற்போது ஏ.ஐ.சி.டி.இ.யின் தலைவராக டாக்டர் அனில் டி.சகஸ்ரபுதே செயல்பட்டு வருகிறார். இவருடைய தலைமையின் கீழ் பிற மண்டல அலுவலகங்கள் உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அகில் இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவுக்கென http://www.aicte-india.org என்ற இணையதளம் உள்ளது. இந்த இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இதேபோல அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்துள்ள கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள், நீக்கப்பட்ட பாடத்திட்டங்கள் எனப் பல விவரங்களையும் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.
மாநிலங்கள் வாரியாக உள்ள பல்கலைக்கழங்கள், பொறியல் கல்லூரிகளின் பட்டியலையும் காணலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளின் பட்டியலையும் இணையதளத்தில் பார்க்கலாம். கல்லூரிகளின் தகவல்களையும்கூட இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த இணையதளத்தை ஒருமுறை பார்ப்பது நல்லது.