Published : 08 Sep 2020 07:45 AM
Last Updated : 08 Sep 2020 07:45 AM

அரியர் பாடத்தேர்ச்சி தொடர்பாக யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை: சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி விளக்கம்

அரியர் பாடத்தேர்ச்சி தொடர்பாக யுஜிசியிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று சென்னை பல்கலை. துணைவேந்தர் கவுரி தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலால் கல்லூரிகளில் இறுதி பருவத்தேர்வு தவிர மற்ற அனைத்துதேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். அதன்பின் அரியர் பாடத்தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த அறிவிப்பு நீண்டகாலமாகஅரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரியர் பாடங்களுக்கு தேர்ச்சி வழங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) எதிர்ப்பு தெரிவித்து மின்னஞ்சல் வழியே கடிதம் அனுப்பியுள்ளதாக அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா தகவல் வெளியிட்டார்.

அதேநேரம் ஏஐசிடிஇ-யிடம்இருந்து எந்த கடிதமும் வரவில்லைஎன்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்பு தெரிவிக்கவே விவகாரம் பெரும் சர்ச்சையானது. நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு அறிவித்தபடி அரியர்பாடங்களுக்கு தேர்ச்சி வழங்கப்படுமா என குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த சூழலில் அரியர் பாடத்தேர்ச்சி விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலை.யை தவிர்த்துதமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசியிடம் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வரவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுதொடர்பாக சென்னை பல்கலை. துணைவேந்தர் எஸ்.கவுரியிடம் கேட்டபோது, “அரியர் பாடங்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்குவது குறித்து பல்கலை.மானியக் குழுவிடம் (யுஜிசி) இருந்து எந்தவொரு மின்னஞ்சல்கடிதமும் எங்கள் பல்கலை.க்குவரவில்லை. இந்த விவகாரத்தில்அரசின் வழிகாட்டுதலின்படி முடிவுகள் மேற்கொள்ளப்படும்’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x