Published : 29 Aug 2020 12:53 PM
Last Updated : 29 Aug 2020 12:53 PM
தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் இன்று நாடு முழுவதும் ஜேஇஇ ஓட்டல் மேலாண்மைத் தேர்வு நடைபெற உள்ளது.
NCHMCET JEE எனப்படும் ஓட்டல் மேலாண்மை மற்றும் சமையல் தொழில்நுட்பத்துக்கான தேசிய கவுன்சில் சார்பில் இந்த கூட்டு நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு இன்று (ஆக.29) மாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
* தேர்வு மையம், உட்காரும் இடம், கணினித் திரை, கீபோர்டு, மவுஸ், வெப் கேமரா, நாற்காலி உள்ளிட்ட அனைத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.
* தேர்வு அறைக்குள் நுழையும் முன்னதாகத் தேர்வர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட வேண்டும்.
* ஒரு இருக்கை விட்டு அடுத்தடுத்த நாற்காலிகளில் தேர்வர்கள் அமர வைக்கப்பட வேண்டும்.
* முன்னதாக மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
* கூடுதல் விடைத்தாள்கள் சுத்தம் செய்யப்பட்டு, தேர்வு மையங்களில் வைக்கப்பட வேண்டும்.
* தேர்வு முடிந்ததும் ஒருவர் பின் ஒருவராகத் தேர்வறையை விட்டு வெளியேற வேண்டும்.
* தேர்வர்கள் சொந்தமாக 50 மில்லி. சானிடைசர், சொந்தத் தண்ணீர் பாட்டில், பால்பாயிண்ட் பேனா ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நுழைவுத் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT