Published : 18 Aug 2020 08:00 AM
Last Updated : 18 Aug 2020 08:00 AM

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி அந்தந்த பள்ளிகளில் நேற்று தொடங்கியது.

2019-20 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 27-ம் தேதி முதல்ஏப்ரல் 13-ம் தேதி வரை நடக்க இருந்தது. கரோனா பொது ஊரடங்குகாரணமாக, 3 முறை தள்ளிவைக்கப்பட்ட பிறகும் பொதுத் தேர்வை நடத்த முடியவில்லை. இதைத் தொடர்ந்து, தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கவும், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண், வருகைப் பதிவு அடிப்படையில் தேர்ச்சி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தேர்வு முடிவுகள் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டன.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் போதிய வருகைப் பதிவுஇல்லாத மாணவர்கள், உயிரிழந்தவர்கள் நீங்கலாக எஞ்சிய 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அரசு தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கினர்.

அனைத்து மாணவ, மாணவிகளும் சமூக இடைவெளியை பின்பற்றி, சான்றிதழை பெற்றுச்சென்றனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் 21-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x