Published : 17 Aug 2020 07:06 AM
Last Updated : 17 Aug 2020 07:06 AM

அரசுப் பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை இன்று தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் கரோனா வைரஸ்தொற்றின் தீவிரம் சற்று தணியத் தொடங்கியுள்ள நிலையில் முதல்கட்டமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி அரசுப் பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று (ஆக.17) தொடங்குகிறது. ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

தனியார் பள்ளிகள் பெரும்பாலும் மாணவர் சேர்க்கை பணிகளை முடித்துவிட்டன. எனினும், கடந்த ஆண்டுகளைவிட தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவாகவே இருப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன.

கரோனா ஊரடங்கால் பெரும்பாலான மக்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளும் அதீத கல்விக் கட்டணத்தை முன்வைப்பதால் அரசுப்பள்ளிகளை நோக்கி பெற்றோரின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது தனிநபர் இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட அரசின் பாதுகாப்பு வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளஸ் 1 வகுப்பு மாணவர்சேர்க்கை ஆக.24-ல் தொடங்கஉள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x