Last Updated : 12 Aug, 2020 03:10 PM

 

Published : 12 Aug 2020 03:10 PM
Last Updated : 12 Aug 2020 03:10 PM

பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு: 9 பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்து பேட்டியளித்த வி.செல்லதுரை. அருகில் எஸ்.இளங்கோ | படம்: ஜெ.மனோகரன்.

கோவை

தமிழகத்தில் உள்ள 9 பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர பி.இ., பிடெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகத்தின் கீழ், தமிழகத்தில் செயல்பட்டு வரும் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, சிஐடி கல்லூரி, மதுரை தியாகராஜர் கல்லூரி ஆகிய 9 கல்லூரிகளில் பகுதிநேர பிஇ., பிடெக். படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தப் படிப்புகளில் 2020-21- ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை செயலாளரும், கோயமுத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருமான வி.செல்லதுரை கூறியதாவது:
’’பகுதி நேர பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு www.ptbe-tnea.com என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். கணினி, ஆண்ட்ராய்டு செல்போன், இணையதள வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள அதே மையங்களில் பகுதிநேர பி.இ., பி.டெக். படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். இதை 'செயலாளர், பகுதிநேர பி.இ., பிடெக் படிப்பு சேர்க்கை, கோயமுத்தூர்' என்ற பெயருக்கு வரைவோலையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் பூர்த்தி செய்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் வரைவோலையை இணைத்து 'செயலாளர், பகுதிநேர பி.இ., பிடெக். படிப்பு மாணவர் சேர்க்கை, கோயமுத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி (சிஐடி), அவிநாசி ரோடு, கோவை- 641014' என்ற முகவரிக்கு வரும் ஆக. 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களாக இருக்க வேண்டும். ஏற்கெனவே 2 ஆண்டுகள் பணியாற்றி, தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்'’.
இவ்வாறு அவர் கூறினார்.

கலந்தாய்வு விவரம்
பகுதிநேர பி.இ., பி.டெக். மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் எஸ்.இளங்கோ கூறும்போது, 'விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பத்தின் நிலை குறித்து செப். 10-ம் தேதி அறிந்து கொள்ளலாம். 11-ம் தேி முதல் 13-ம் தேதி வரை தங்களுடைய சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களை ஆன்லைன் மற்றும் காணொலிக் காட்சி மூலமாகக் கேட்டு விளக்கம் பெறலாம். செப். 17-ம் தேதி காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

செப். 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சிறப்புப் பிரிவினருக்கும், தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் செப். 23, 24, 26, 27 ஆகிய தேதிகளில் முதல் கட்டமாகவும், 28, 29, அக். 3 மற்றும் 4-ம் தேதிகளில் 2-ம் கட்டமாகவும், அக். 5, 6, 8, 9 ஆகிய தேதிகளில் 3-ம் கட்டமாகவும் பொதுப் பிரிவினருக்குக் கலந்தாய்வு நடைபெறும்' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x