Published : 01 Aug 2020 01:25 PM
Last Updated : 01 Aug 2020 01:25 PM

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குச் சான்றிதழ் பதிவேற்றம் தொடக்கம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இங்குள்ள 92 ஆயிரம் இடங்களுக்கு கரோனா வைரஸ் காரணமாக முதல் முறையாக இணையதளத்தில் விண்ணப்பிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கியது. கல்லூரிகளில் சேர 2 லட்சத்து 9,237 பேர் விண்ணப்பித்தனர். அதில் ஒரு லட்சத்து 27,975 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்களுக்குத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில், சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று மாணவர்கள் கோரியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் இன்று முதல் தங்களின் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

மாணவர்கள் http://tngasa.in/ என்ற இணையதளம் வழியாக சான்றிதழைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x