Published : 29 Jul 2020 05:33 PM
Last Updated : 29 Jul 2020 05:33 PM

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம்; அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு: புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்

5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம், அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

தற்போது அமலில் இருக்கும் கல்விக் கொள்கை 1968-ல் உருவாக்கப்பட்டு, 1992-ல் திருத்தப்பட்டது. தற்போதைய புதிய கல்விக் கொள்கை 2014 தேர்தலில் பாஜகவின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருந்தது.

இதற்கிடையே கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கை முன்வரைவின் முழுமையான அறிக்கையை, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக் குழு, கடந்த ஆண்டு மே 31-ம் தேதி சமர்ப்பித்தது.

உயர் கல்வித்துறைச் செயலர் அமித் கரே

இந்நிலையில் தற்போது புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உயர் கல்வித்துறைச் செயலர் அமித் கரே அதன் முக்கிய அம்சங்களைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி,

* 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பது உறுதி செய்யப்படும்.
* 3 வயது முதல் குழந்தைகளின் கல்வி கண்காணிக்கப்படும்.
* புத்தகங்கள் மட்டுமின்றி செய்முறை, விளையாட்டுகள் மூலம் பாடம் கற்பிக்கப்படும்.
* மாணவர்கள் உள்ளூர்க் கைவினைத் தொழில்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.
* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரே மாதிரியாகக் கற்பிக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய மென்பொருட்கள் உருவாக்கப்படும்.
* 6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படும்
* 12-ம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி கற்பிக்கப்படும்.
* பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்.
* சட்டம், மருத்துவப் படிப்புகளைத் தவிர்த்து உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த வாரியம் அமைக்கப்படும்.
* எம்.பில். படிப்பு நிறுத்தப்படுகிறது.
* நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படும்.
* கல்வியறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்புக் கல்வி மண்டலங்கள் உருவாக்கப்படும்.
* தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்குஒரே நுழைவுத் தேர்வு வைக்கப்படும். இது விருப்பத் தேர்வு மட்டுமே, கட்டாயமல்ல.
* பொறியியல் போன்ற உயர்கல்வி படிப்புகளில் மாணவர்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிக்கலாம்.

புதிய கல்விக்கொள்கை 22 மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x