

12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளில் புதுச்சேரி, காரைக்காலில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 1.62 சதவீதம் சரிந்து 91.32% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் அரசுப் பள்ளிகளிலும் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 3.65 சதவீதம் குறைந்து 81.97 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் தனிக் கல்வி வாரியம் கிடையாது. தமிழக அரசுப் பாடத்திட்டங்களையே புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பின்பற்றுகின்றனர். வழக்கம்போல் இம்முறையும் காலதாமதமாகவே பிளஸ் 2 முடிவுகள் புதுச்சேரியில் காலை 11.40 மணிக்கே வெளியானது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 6,792 மாணவர்கள், 7,779 மாணவிகள் என மொத்தம் 14,571 பேர் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதினர். இன்று வெளியான தேர்வு முடிவுகளில் 13,306 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 6,012 பேர், மாணவிகள் 7,294 பேர் மொத்த தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 91.32 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.62 சதவீதம் குறைவாக உள்ளது.
மாணவிகளே இம்முறையும் அதிகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக மாணவர்கள் 88.52 சதவீதமும், மாணவிகள் 93.77 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 81.97 சதவீதம் ஆக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 3.65 சதவீதம் குறைவாகும்,
சரிந்த தேர்ச்சி விகிதம்
புதுச்சேரி, காரைக்கால் அரசுப் பள்ளிகளில் கடந்த முறை தேர்ச்சி விகிதம் 11.86 சதவீதம் அதிகரித்திருந்தது. ஆனால், இம்முறை அத்தேர்ச்சி சதவீதம் சரிந்துள்ளது. குறிப்பாகப் புதுச்சேரிப் பகுதியில் மட்டும் கடந்த ஆண்டைவிட அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி 3.84 சதவீதம் சரிந்துள்ளது. அதேபோல் காரைக்கால் பகுதியில் கடந்த ஆண்டைவிட 2.91 சதவீதம் சரிந்துள்ளது.