கல்விப் பசியாற்றிய காமராஜர் பிறந்த நாள் இன்று

கல்விப் பசியாற்றிய காமராஜர் பிறந்த நாள் இன்று
Updated on
2 min read

இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார் காமராஜர். திண்ணைப் பள்ளி நடத்திய வேலாயுதம் வாத்தியாரிடம்தான் முதலில் படித்தார். பிறகு, ஏனாதி நாயனார் வித்யாசாலை. அதைத்தொடர்ந்து சத்திரிய வித்யாசாலை. படிக்கும் காலத்திலேயே சுதந்திரப் போராட்டக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்துவிட்டார் காமராஜர். விளைவாக, படிப்பு ஆறாம் வகுப்போடு நிறுத்தப்பட்டது. அரசியலில் ஆர்வம் துளிர்த்தது.

பள்ளிப் படிப்பை முடிக்காத காமராஜரைப் 'படிக்காதவர்' என்று சொல்லிவிட முடியாது. கல்விக் கூடங்களுக்கு வெளியே தன்னை வளர்த்துக்கொண்ட சுயம்பு அவர். பத்திரிகைகள், புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றார். கேரளத்தில் இருந்த கொஞ்ச காலத்தில் மலையாளத்தைக் கற்றுக்கொண்டுவிட்டார். தெலுங்கும் தெரியும். இந்தியும் பேசுவார்.

காமராஜரின் சாதனைகளிலேயே மகத்தானது, தமிழக வரலாற்றிலேயே கல்வித் துறையில் அதிகபட்ச வளர்ச்சியைக் கொண்டு வந்ததுதான். அனைவருக்குமான இலவசக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மதிய உணவுத் திட்டமும் அவர் கொண்டு வந்ததுதான்.

கல்விப் பசியாற்றிய காமராஜர்

“அத்தனை பேரும் படிக்கணும். வயிற்றிலே ஈரம் இல்லாதவன் எப்படிப் படிப்பான்? அவனும்தானே நம் இந்தியாவுக்குச் சொந்தக்காரன்? ஏழைக் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே சோறு போட்டுப் படிக்க வைக்கணும். இது மிக முக்கியம். உடனடியாகத் தொடங்கிவிடணும்” என்றவர் காமராஜர்.

வேளாண் விளைச்சலில் உபரி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத உணவுப் பற்றாக்குறை காலகட்டத்தில் செயல்படுத்தப்பட்ட காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தை இவ்வளவு காலம் கடந்தும் தமிழகம் மனதாரப் போற்றுகிறது. இந்தத் திட்டத்துக்கான விதை அவர் சிறுவனாக இருந்தபோதே விழுந்துவிட்டது.

காமராஜருடன் உடன் படித்த மாணவன் பெருமாளால் மதிய உணவுக்காக வீட்டுக்குப் போய்வரும் வாய்ப்பு இல்லை. பள்ளியிலிருந்து வெகு தூரம் இருந்தது பெருமாளின் வீடு. ஆக, பெருமாளுக்கான மதிய உணவு வெறும் தண்ணீர்தான். இதை அறிந்துகொண்ட காமராஜர் அவரது பாட்டியிடம், “என்னால் இனி மதியம் சாப்பிட வீட்டுக்கு வர முடியாது. சாப்பாடு கட்டிக்கொடுங்கள்” என்று அடம்பிடித்தார். பிறகு, தனது மதிய உணவைப் பெருமாளுடன் பகிர்ந்துகொண்டார். இந்தப் பண்புதான் பின்னாளில் மிகப் பெரும் திட்டமாக விரிந்தது.

காமராஜர் 1957-1962 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 13,000-க்கும் மேற்பட்ட புதிய பள்ளிகளைத் திறந்தார். மாணவர் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சம் ஆக உயர்ந்தது. இந்தச் சாதனையைப் போற்றும் வகையிலேயே 2008 முதல் கல்வி வளர்ச்சி தினமாக காமராஜரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in