Published : 02 Jul 2020 12:26 PM
Last Updated : 02 Jul 2020 12:26 PM

ஆசிரியர்களுக்கு இலவச இணைய ஆசிரியர் பயிற்சிப் படிப்பு: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார்

ஆசிரியர்களுக்கு இலவச இணைய ஆசிரியர் பயிற்சிப் படிப்பை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கி வைத்தார்.

இந்தப் படிப்பை சிபிஎஸ்இ மற்றும் டாட்டா அறக்கட்டளை இணைந்து உருவாக்கியுள்ளது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தீக்‌ஷா தளத்தில் இந்த இணையப் பயிற்சிப் படிப்பு இலவசமாகக் கிடைக்கிறது.

இது தொடர்பாக அமைச்சகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஆசிரியர்களுக்கும் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் அனுபவக் கற்றலை இந்தப் படிப்பு சொல்லிக் கொடுக்கும். இதன் மூலம் மாணவர்கள் தங்களின் சொந்த வாழ்வைச் சுற்றி இருக்கும் பாடங்களைத் தாண்டி உலகம் முழுவதும் கற்றலை நிகழ்த்த முடியும்.

இந்தப் பயிற்சியை முறையாக அளிப்பதன் மூலம் மாணவர்கள் மத்தியில் சுய சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் படிப்புத் திறனை வளர்த்தெடுக்கலாம். ஆசிரியர்கள் சரியாக வழிநடத்தி, அறிவை வழங்கும் பட்சத்தில், மாணவர்களால் சிந்தித்து, முடிவெடுத்து, அத்துறையில் நிபுணராக முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, ''இந்த கோர்ஸில் அனைத்து ஆசிரியர்களும் இணைய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறேன். ஆசிரியர்கள் கற்றலை மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமாக மாற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும்.

21-ம் நூற்றாண்டின் திறன்களுக்கு ஏற்றவாறு ஆசிரியர்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பயிற்சியை முடித்த ஆசிரியர்களுக்கு தீக்‌ஷா தளத்தில் இருந்து சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x