Published : 27 Jun 2020 11:17 AM
Last Updated : 27 Jun 2020 11:17 AM

நீட், ஜேஇஇ தேர்வுகளைத் தள்ளி வையுங்கள்: மாணவர்களிடையே வலுக்கும் கோரிக்கை; ட்ரெண்டாகும் ஹேஷ்டேகுகள்

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மாணவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 3-ம் தேதி நடைபெற இருந்தது.

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதேபோல ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு ஜூலை 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சுமார் 15 லட்சம் பேர் நீட் தேர்வுக்கும் 9 லட்சம் மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர்.

மாணவர்கள் கோரிக்கை
இந்த நேரத்தில் போட்டித் தேர்வுகளை நடத்துவது மிகவும் ஆபத்தானது. அதனால், கரோனா பாதிப்பு குறையும் வரை தேர்வுகளை நடத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக ட்விட்டரில் #PostponeneetJee, #NoExamsInCovid, #HealthOverNEETjee உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

முன்னதாக, நாடு முழுவதிலும் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களும் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என சமூக வலைதளங்களில் #StudentLivesMatter என்ற பிரச்சாரத்தைக் கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x