

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லலில் இரண்டரை வயதுக் குழந்தை 196 நாடுகளின் தலைநகரங்களைக் கூறி அசத்தி வருகிறார்.
காரைக்குடி அருகே கல்லல் பகுதியைச் சேர்ந்தவர் வினோத், வாணிஸ்ரீ தம்பதி. வினோத், திருச்சியில் கணினி மையம் வைத்திருந்தார். இதனால் அங்கேயே வசித்து வந்த வினோத் குடும்பத்தினர், கரோனா ஊரடங்கால் சொந்த ஊரான கல்லலில் குடியேறினர்.
வாணிஸ்ரீ ஊரடங்கு காலத்தில் சமையல் செய்யும் நேரம் போக, மற்ற நேரங்களைப் பயனுள்ளதாக்க விரும்பினார். இதற்காக இரண்டாம் வகுப்பு முடித்த தனது மகன் ஜோயல் மனோகரனுக்கு உலக நாடுகளின் பெயர்கள், தலைநகரங்களின் பெயர்களைக் கற்றுத் தரத் தொடங்கினார்.
இதை அவரது இரண்டரை வயது மகள் ஹர்ஷிதா ஆர்வமுடன் கவனிக்கத் தொடங்கினார். இதையடுத்து அவருக்கு உலக நாடுகள், தலைநகரங்களின் பெயர்கள் மட்டுமின்றி, இந்திய மாநிலங்களின் பெயர்கள் அவற்றின் தலைநகரங்களின் பெயர்கள், உலக நாடுகளின் கொடிகள் குறித்த விவரத்தையும் வாணிஸ்ரீ கற்றுக் கொடுத்து வருகிறார்.
தற்போது அந்தக் குழந்தை 196 நாடுகள், தலைநகரங்களின் பெயர்களைத் தவறின்றிக் கூறுகிறார். அதேபோல் 48 வினாடிகளில் இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்களின் பெயர்கள் அனைத்தையும் கூறுகிறார். குழந்தை ஹர்ஷிதாவைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.