Published : 12 Jun 2020 07:27 AM
Last Updated : 12 Jun 2020 07:27 AM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் கூடுதல் இடஒதுக்கீடு?- முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் தகவல்

ஈரோடு வஉ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காய்கறிச்சந்தை திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

ஈரோட்டிலிருந்து திண்டல் வரையிலான புதிய மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனைப் பணி நிறைவுற்றுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு பாலப் பணிகள் தொடங்கப்படும். 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வைப் பொறுத்தவரை பல்வேறு விமர்சனங்கள், எதிர்மறையான கருத்துக்கள், எதிர்வினைகள் உலவி வந்தன.

இந்நிலையில், தேர்வைத் தள்ளி வைப்பதைக் காட்டிலும், அனைத்து மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி என்கிற அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட்டு விமர்சித்த அனைவரையும் தோற்கடித்துள்ளார்.

10-ம் வகுப்பில் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி குறித்து ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிப் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்து 16 பேர் கொண்ட கல்வியாளர்கள் ஆய்வுக் குழு அறிக்கையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்.

மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு குறித்து முதல்வர் மிக விரைவில் அறிவிப்பார். ஆயிரக்கணக்கானோர் கூடும் பொதுநூலகங்கள் திறப்பு குறித்தும் முதல்வர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x