Published : 01 Jun 2020 07:24 AM
Last Updated : 01 Jun 2020 07:24 AM

பள்ளி விடுதிகளை ஜூன் 11 முதல் திறக்கலாம்- தமிழக அரசு உத்தரவு

சென்னை

பள்ளி மாணவர்களுக்கான அனைத்து விடுதிகளையும் ஜூன் 11-ம் முதல் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உள்ள மாணவர் விடுதிகளை வரும் 11-ம் தேதி முதல் திறந்திருக்க வேண்டும். தினமும் வளாகம், கழிப்பிடம் உட்பட விடுதியின் அனைத்து பகுதிகளிலும் காலை, மாலை என இருமுறையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இதுதவிர விடுதியில் தங்கியுள்ள மாணவர்களின் உடல்வெப்பத்தை தெர்மல் கருவி மூலம் காலை மற்றும் மாலையில் பரிசோதித்து, அந்த விவரங்களை குறிப்பிட்டு வைக்க வேண்டும். மாணவர்கள் உணவருந்த செல்லும் முன்னும், தேர்வு முடித்து விடுதிக்கு திரும்பும்போதும் சோப்பு மற்றும் கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை கழுவ அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல், விடுதியில் மாணவர்கள் முககக்கவசம் அணிந்திருப்பதையும், தனி நபர் இடைவெளியை பின் பற்றுவதையும் காப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்துவரும் மாணவர்களுக்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும். மேலும், மாணவர்கள் தேர்வெழுத செல்வதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளும் செய்துதர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x