Published : 27 May 2020 02:11 PM
Last Updated : 27 May 2020 02:11 PM

இணையவழி வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

இணையவழி வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஆன்லைன் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாயக் கல்விக் கட்டண வசூல் செய்பவர்கள் மீதும் முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுப்பார்.

பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதால், பாடத்திட்டத்தைக் குறைப்பது குறித்து ஆராயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அளிக்கும் அறிக்கையை வைத்து சுழற்சி முறையில் வகுப்புகள், பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்தும் முடிவெடுக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையறை இல்லாமல் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலான தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே புதிய கல்வியாண்டை ஒட்டி, தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் இணைய வழியில் கற்பித்தலை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்தன.

சில தனியார் பள்ளிகள் ஏற்கெனவே மாணவர்களுக்கு நாள்தோறும் சில மணிநேரம் ஆன்லைன் வகுப்புகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x