Published : 23 May 2020 05:21 PM
Last Updated : 23 May 2020 05:21 PM
10-ம் வகுப்புத் தேர்வு முடிவுக்குப் பிறகே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, ’’பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து, முடிவுகள் வௌியான பிறகே அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதற்கு முன்பாகத் தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அத்துடன் தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்புத் தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்தப் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு முடிவுக்கு வந்து, பள்ளிகள் தொடங்கும் முன்பே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவலை அடுத்து, பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூன் 15-ம் தேதி தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT