Published : 22 May 2020 05:15 PM
Last Updated : 22 May 2020 05:15 PM
‘கரோனா’ ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாததால் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தும் வகுப்புகள் தொடங்கின.
தமிழகத்தில் ‘கரோனா’ ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆனால், தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதால் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வகுப்புகளைத் தொடங்கிவிட்டனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள், ஆன்லைன் மூலம் கற்க வாய்ப்பு இல்லாததால் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி இன்று மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் தொடங்கி வைத்தார்.
மாநகராட்சி பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பிக்கும் 1,500 மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் இந்த வகுப்புகள் தொடங்கப்பட்டன. காலையில் 2 கட்டங்களாகவும், மாலை 2 கட்டங்களாகவும் அனைத்து பாடங்களும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்று அவ்வை மாநகராட்சி பள்ளி சிறப்பு வகுப்பில் பயின்று வந்த மாணவ, மாணவிகளுக்கும் இதுபோல் ‘நீட்’ பயிற்சி ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்குமாறும் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார். அதன்படி விரைவில் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் துணை ஆணையளர் வி.நாகஜோதி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், கணினி திட்ட தொகுப்பாளர் ரவி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT