Published : 13 May 2020 03:45 PM
Last Updated : 13 May 2020 03:45 PM

ஏழைகளின் துயர்நீக்கும் ஆசிரியர்கள்: பேர்ணாம்பட்டில் ரூ.4 லட்சத்துக்கும் மேல் நிவாரண உதவி

கரோனா துயரத்தில் தோள் கொடுக்க ஏராளமானோர் முன்வந்து, தங்களால் ஆன உதவிகளைத் தன்னலமில்லாமல் வழங்கிக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு செஞ்சிலுவைச் சங்கமும் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இணைந்து 30-க்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தி, கரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இதுதொடர்பாக பேர்ணாம்பட்டு வட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் செயலாளரும் ஆசிரியருமான பொன்.வள்ளுவன் கூறும்போது, ''கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி தொடங்கிய பணி இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. பேர்ணாம்பட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் 1000-க்கும் மேற்பட்ட நரிக்குறவ மக்கள், அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்கள், மலைவாழ் இருளர் இன மக்கள் உள்ளிட்ட விளிம்புநிலை மனிதர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம்.

அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் காய்கறிகளையும் உணவுகளையும் வழங்கி வருகிறோம். சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவைதவிர சிற்றுண்டி மற்றும் உணவு என இதுவரை 4 லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன'' என்கிறார் பொன்.வள்ளுவன்.

இதுகுறித்து மேலும் பேசியவர், ''இந்த கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் முகாமில் செஞ்சிலுவை சங்கத்தினருடன் 17 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர், தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவர் மற்றும் பத்து சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர்.

ரமலான் நோன்பு மாதத்தில் 10 முஸ்லிம் ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நோன்போடு பயணித்து நிவாரண முகாமில் பங்கேற்றது நெகிழ்ச்சிமிகு தருணம்'' என்றார் பொன்.வள்ளுவன்,

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x