Published : 16 Apr 2020 06:17 PM
Last Updated : 16 Apr 2020 06:17 PM

குறைந்த விலையில் நவீன வென்டிலேட்டர்: கரோனாவை எதிர்க்க ஓசூர் இளம் பொறியாளர் சாதனை

கரோனா வைரஸ் சிகிச்சைக்குத் தேவையான நவீன தொழில்நுட்பம் கொண்ட வென்டிலேட்டரைக் குறைந்த விலையில் உருவாக்கி ஓசூரைச் சேர்ந்த பொறியாளர் சாதனை படைத்துள்ளார்.

ஓசூர் நகரில் உள்ள விஜய் மருத்துவமனையில் புதிய வென்டிலேட்டர் அறிமுகம் மற்றும் செயல் வடிவ விளக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் விஜய் மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் முன்னிலையில் புதிய வென்டிலேட்டர் கருவியை உருவாக்கிய ஓசூர் அந்திவாடியைச் சேர்ந்த பொறியாளர் அகிலேஷ் ஜோசப் மைக்கேல் (24 வயது) செயல் விளக்கம் அளித்தார்.

பி.டெக். மெக்கானிக்கல் மற்றும் எம்.டெக். எம்படெட் சிஸ்டம் பயின்றுள்ள அகிலேஷ் கடந்த 6 ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு சார் துறையில் பணியாற்றி வருகிறார். குறைந்த விலையில் மூன்றாம் தலைமுறைக்கான தொழில்நுட்பம் கொண்ட வென்டிலேட்டரை முழுக்க முழுக்க ஓசூரிலேயே வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து பொறியாளர் அகிலேஷ் கூறியதாவது:

''புதிய வென்டிலேட்டர் கருவி கோவிட் - 19 மருத்துவ சிகிச்சையின்போது பெரிய அளவில் உயிர் காக்கும் பணியில் பயன் தரக்கூடியதும், பிற நேரங்களில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர் காக்கும் கருவியாகவும் செயல்படும் திறன் கொண்டது. இந்தக் கருவி, தானியங்கியாக செயல்பட்டு மருத்துவரின் கட்டளையைத் தொடர்ந்து செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்த 10 இன்ச் அளவுள்ள தொடுதிறையில் பயனர் வரைகலை இடைமுகம் ( கிராஃபிக் யூசர் இன்டர்ஃபேஸ்) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு அமைப்பைக் கொண்டு நோயாளிக்குச் செலுத்தப்படும் உயிரி காற்றின் அளவு, காற்றின் அளவு, மொத்த காற்றின் அளவு என நோயாளிக்குச் செலுத்தப்படும் காற்றின் அளவை மில்லி லிட்டர் அலகில் கணக்கிட்டுச் செலுத்த இயலும். காற்றழுத்தம், மூச்சு சுழற்சி ஆகியவற்றையும் கட்டுப்படுத்த இயலும். மேலும் இது காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவை குறித்த தகவலையும் காற்றழுத்தம், உயிரி காற்றின் அளவு ஆகியவை குறித்த புள்ளி விவரங்களையும் காட்டும்.

இந்தக் கருவி செயல்பாட்டில் ஏதேனும் கோளாறு ஏற்படுமேயானால் கருவி அதை உடனடியாக உணர்ந்து எச்சரிக்கை ஓசையை எற்படுத்தி மருத்துவக் குழுவினருக்குத் தெரிவிக்கும். இது ஐஓடி தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு மருத்துவரால் நோயாளியின் நிலையைக் கண்டறிந்து இந்த வென்டிலேட்டர் கருவியை இயக்க இயலும்.

இதற்கு ஒப்பான வென்டிலேட்டர் கருவிகள் தற்போது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுமார் ரூ.2.50 லட்சம் விலைக்கு விற்கப்படுகிறது. ஆனால், ஓசூரிலேயே இதை வடிவமைத்து உற்பத்தி செய்வதால் இதன் விலை சந்தை மதிப்பில் ரூ.90 ஆயிரம் மட்டுமே''.

இவ்வாறு அகிலேஷ் கூறினார்.

புதிய வென்டிலேட்டர் செயல் வடிவ மாதிரிக் குழுவில் இடம் பெற்றிருந்த ஓசூரைச் சேர்ந்த சந்தோஷ், மாதேஸ்வரன். சிவா மற்றும் முனிராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x