

கரோனா பரவலின் தீவிரத்தைப் பொறுத்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வை ஏப்ரல்இறுதியில் நடத்த தமிழக அரசுதிட்டமிட்டிருந்தது. இதற்கிடையே, கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் ஊரடங்குநீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 10-ம்வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற குழப்பம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நிலவி வருகிறது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே அவர்களின் அடுத்தக்கட்ட உயர்நிலை படிப்புகளை தேர்வு செய்ய வழிவகுக்கும். மேலும், டிப்ளமோ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளுக்கு 10-ம்வகுப்பு தேர்ச்சி மிக அவசியமானது. எனவே, மற்ற வகுப்புகளைப் போல முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும்.
கரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து மே அல்லது ஜூனில் தேர்வுகள் நடத்தப்படும். அதன்பின்னும் தாக்கம்நீடித்தால் சிபிஎஸ்இ போல கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 3 முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தவும் ஆலோசித்து வருகிறோம்.
எனினும், இந்த விவகாரத்தில் அரசின் வழிகாட்டுதலின்படி சூழலின் தீவிரத்தை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். எனவே, மாணவர்கள் குழப்பமடையாமல் தொடர்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும்” என்றனர்.