ஐசிஎஸ்இ, ஐசிஎஸ் பொதுத் தேர்வுகள் ரத்தா?- சிஐஎஸ்சிஇ விளக்கம்

ஐசிஎஸ்இ, ஐசிஎஸ் பொதுத் தேர்வுகள் ரத்தா?- சிஐஎஸ்சிஇ விளக்கம்
Updated on
1 min read

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐசிஎஸ்இ, ஐசிஎஸ் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என சிஐஎஸ்சிஇ நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன / தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு மாநிலங்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சிஐஎஸ்சிஇ நடத்தும் ஐசிஎஸ்இ, ஐசிஎஸ் தேர்வுகள் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ரத்து செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்தச் செய்தி சம்பந்தப்பட்ட பாடத்திட்டங்களைப் படித்து வரும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிஐஎஸ்சிஇ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து சிஐஎஸ்சிஇ தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்ரி அரதூண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஐசிஎஸ்இ, ஐசிஎஸ் பாடத் திட்டங்களில் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. தேர்வுக்கான புதிய கால அட்டவணை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை.

ஊரடங்கு முடிந்தபின், இதுகுறித்துத் தகவல் வெளியாகும். எனவே மாணவர்கள், பெற்றோர்கள் யாரும் தேர்வுகள் குறித்து, சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம்.

வதந்தி பரப்பியவர்கள் குறித்து, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து நமது இணையதளத்தில் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in