Published : 27 Mar 2020 02:53 PM
Last Updated : 27 Mar 2020 02:53 PM

10, 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

10, 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்து அனைவருக்கும் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காப்பாற்றத் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவரும் தமிழ்நாடு அரசைப் பாராட்டி மகிழ்கிறோம். நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாக உள்ளது.

கத்தியின்றி ரத்தமின்றி மூன்றாம் உலகப்போர் யுத்தமொன்றினை கரோனா தொடுத்துள்ளது. இந்நிலையில் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவோம். நாளுக்கு நாள் கரோனா வைரஸ் விஸ்வரூபமெடுத்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நமக்கு நாமே தனிமைப்படுத்தத் தவறிவிட்டால் சமூகப் பரவலைத் தடுக்க முடியாது.

பேரிடர் காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையானதாகும். உயிரா, படிப்பா என்றால் உயிரே முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். இதற்கிடையே 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கவே இல்லை. 11-ம் வகுப்பிற்கு கடைசித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு கடைசித் தேர்வில் 34 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதாதவர்களுக்கு மறுதேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறதென்று சுகாதாரத்துறை அமைச்சர் எச்சாரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் எதிர்கால மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும் மனஉளைச்சலிலும் உள்ளார்கள். வீட்டிலேயே முடங்கி உள்ளதால் மேற்படிப்பு என்னவாகுமோ என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.

எனவே 10, 11,12-ம் வகுப்புகளின் அனைத்துப் பொதுத்தேர்வுகளையும் ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி அறிவித்திட வேண்டுகிறேன். மேலும் கரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மாணவர்கள் தங்களின் மேற்படிப்பில் பாடப்பிரிவினைத் தேர்வு செய்வதற்கு ஏதுவாக அரசே ஒரு சிறப்புத் தேர்வு வைத்து தேர்வு செய்து கல்லூரிகளில் இடமளிக்கலாம்.

ஏற்கெனவே மருத்துவம் பொறியியல் படிப்புகளுக்கு 1985-ம் ஆண்டில் அன்றைய முதல்வர் தேர்வுகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதுபோன்று கலை, அறிவியல் கல்லூரிகளில் விரும்பியப் பாடங்களைத் தேர்வு செய்ய மாநில அரசே சிறப்புத் தேர்வு வைத்து மாணவர்களையும், கல்லூரிகளையும் தேர்வுசெய்து அளிக்கலாம்.

எனவே பெற்றோர்கள், மாணவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் தமிழக முதல்வர் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி அறிவிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x