Published : 28 Feb 2020 09:06 AM
Last Updated : 28 Feb 2020 09:06 AM
ஒடிசாவில் உள்ள 34 ஆயிரம் அரசு பள்ளிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று மாநில கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஒடிசாவில் கடந்த 5 முறை தொடர்ந்து நவின் பட்நாயக் முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், 2020-21-ம் ஆண்டுக்காக பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அப்போது, ஒடிசா பள்ளிகளின் நிலை குறித்து எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அதற்கு மாநில கல்வித் துறை அமைச்சர் சமிர் ரஞ்சன் தாஸ் அளித்த பதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது.
எழுத்துப்பூர்வமாக அமைச்சர் அளித்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒடிசாவில் உள்ள 80 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அதில் 90 சதவீத பள்ளிகளில் கரும்பலகை இல்லை. 34,394 பள்ளிகளில் குடிநீர் வசதி, கழிவறை வசதி இல்லை. 35,645 பள்ளிகளில் மின்சார வசதியும், 37,645 பள்ளிகளில் விளையாட்டு மைதானமும் இல்லை. அதேபோல், 2,451 பள்ளிகளில் நூலக பணியாளர் இல்லை. 16,368 பள்ளிகள் சுற்றுப்புறச் சுவர்கள் இல்லை.
ஆனாலும், கல்வித் துறை நிர்வகிக்கும் 51,434 தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் குடிநீர்வசதி செய்யப்பட்டுள்ளது.
2018-19-ம் கல்வியாண்டில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம்5.42 சதவீதமாக உள்ளது. நடுநிலைப்பள்ளியில் இந்த விகிதம் 6.93 சதவீதமாகவும் உயர்நிலைப் பள்ளிகளில் 5.41 சதவீதமாகவும் இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
ஒடிசாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே கட்சி ஆட்சியில் இருந்த போதும், 34 ஆயிரம் பள்ளிகளில் அடிப்படை வசதி செய்யப்படாமல் இருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT