Last Updated : 17 Feb, 2020 11:00 AM

 

Published : 17 Feb 2020 11:00 AM
Last Updated : 17 Feb 2020 11:00 AM

மட்கும், மட்காத குப்பைகளைச் சேகரிக்க 50 அரசுப் பள்ளிகளுக்கு 100 குப்பைத்தொட்டிகள் வழங்கல்

மட்கும் குப்பைகளையும், மட்காத குப்பைகளையும் தனித்தனியாகச் சேகரிக்க 50 அரசுப் பள்ளிகளுக்கு 100 குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் கடந்த நவம்பர் மாதம் மட்குவது, மட்காதது எனக் குப்பைகளைப் பிரித்துத் தரும் திட்டம் தொடங்கப்பட்டது. எனினும் போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததால், இரு குப்பைகளையும் சேர்த்தே கொட்டி வந்தனர். இதனால் குப்பைகளைக் கையாள்வது அரசுத் தரப்புக்கு பெரும் சவாலாக மாறியது.

குழந்தைகளிடம் இவ்விஷயத்தைக் கொண்டு சென்றால் பெற்றோருக்குப் புரிய வைக்க முடியும் என்று மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது. இதையடுத்து ஒதியம்பட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், முதல்கட்டமாக 100 குப்பைத் தொட்டிகளை வழங்கியது. அதன்படி அரசுப் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்கும் 50 அரசுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. குப்பைகளை மட்குவது, மட்காதது எனத் தனித்தனியாகச் சேகரிக்க, தலா இரண்டு குப்பைத் தொட்டிகள் முதல் கட்டமாக 50 அரசு பள்ளிகளுக்குத் தரப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மட்கும் மற்றும் மட்காத குப்பைகளைப் பிரிப்பது எவ்வாறு என்பது குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் இரண்டு குப்பைக் கூடைகள் வழங்கும் விழா சவரிராயலு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவடு, பள்ளி முதல்வர் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x