Published : 07 Feb 2020 10:12 AM
Last Updated : 07 Feb 2020 10:12 AM

கிருஷ்ணகிரியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி சிறந்த 10 படைப்புகள் மாநில கண்காட்சிக்கு தேர்வு

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்டஅளவிலான அறிவியல் கண்காட்சியில் 10 படைப்புகள் மாநில கண்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன.

பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் கண்காட்சி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர்பிரபாகர் தொடங்கி வைத்து, மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். பின்னர் மாணவர்களிடம் அவர்களின் படைப்புகளின் முக்கியத்துவம் கேட்டறிந்து, சிறப்பாக செயல் விளக்கம் அளித்த மாணவர்களைப் பாராட்டினார்.

இக்கண்காட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 70 படைப்புகளை காட்சிப்படுத்திஇருந்தனர்.

இதில் நீர் உறிஞ்சும் சாலை, கடலில் எல்லையை தாண்டும் மீனவர்களை எச்சரிக்கும் கருவி, உப்பு நீரில் மின்சக்தி பெறுதல், அதிக சூரிய ஒளியிலிருந்து தாவரங்களை காப்பது, நவீன நீர்பாசன கட்டுப்படுத்திகள், மண்ணில்லா செடி வளர்த்தல், கம்பியில்லா மின்சாரம், வேர்க்கடலையில் இருந்து பருப்புகளை எளிதாக பிரித்தெடுக்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு வகையான படைப்புகள் இடம்பெற்றிருந்தன. இதில் 70 படைப்புகள் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

மாணவர்களின் படைப்புகளை டெல்லியில் உள்ள இந்திய புத்தாக்கமைய பிரதிநிதி பிரிஞ்சல் அகர்வால், சென்னை அறிவியல் தொழில்நுட்ப மைய பிரதிநிதி ரவிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். “சிறந்த 10 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவை மாநில போட்டிக்கு அனுப்பப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர்கள் மத்தூர் சின்னப்பன், தேன்கனிக்கோட்டை ஜோதிசந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பிரபாகர், பள்ளியின் தலைமை ஆசிரியர் சேரலாதன், பள்ளி துணை ஆய்வாளர் ஜெயராமன், சுதாகர், சுரேஷ்பாபு மற்றும் 140 மாணவ, மாணவிகள், 70 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

நிறைவாக, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி நன்றி கூறினார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x