Published : 05 Feb 2020 09:08 AM
Last Updated : 05 Feb 2020 09:08 AM
அசாம் மாநிலத்தில் வசிக்கும் போடோ பழங்குடியின மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் போடோ மக்களுக்காக அசாமிலிருந்து போடோலாந்து என்ற தனி மாநிலம் பிரிக்கப்படவேண்டும் என்றும் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்டிஎப்பி) என்ற அமைப்பு நீண்டகாலமாக ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வந்தது.
இந்நிலையில், அந்த அமைப்புடன் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மத்திய அரசு சமாதான உடன்படிக்கையை கொண்டு வந்தது.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அசாம் முதல்வர் சர்வானந்த சோனோவால், என்டிஎப்பி அமைப்பின் முக்கிய நான்கு தலைவர்கள், அசாம் தலைமை செயலாளர் உள்ளிட்டோர் ஜனவரி 27-ம் தேதி கையெழுத்திட்டனர்.
அதன்படி, போடோ பழங்குடியின மக்களுக்கு மாநில பிரிவினையின்றி அரசியல் கட்டமைப்புக்கு உட்பட்டு அரசியல், பொருளாதார உரிமைகளை வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்க நகர்வாக கருதப்படுகிறது.
இந்நிலையில், போடோ ஒப்பந்தத்தை கொண்டாடும் விதமாக பிப்.7-ம் தேதி அசாம் மாநில அரசு சார்பாக விழா நடக்கவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க போடோ ஒப்பந்தத்தை பாராட்டும் வகையில் அசாமில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். இந்த விழாவில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT