Last Updated : 20 Jan, 2020 03:20 PM

 

Published : 20 Jan 2020 03:20 PM
Last Updated : 20 Jan 2020 03:20 PM

பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்வு: நக்சல் பாதித்த சத்தீஸ்கரில் இருந்து 200 இளைஞர்கள் புதுச்சேரி வருகை

நக்சல்களால் பாதிக்கப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து 200 இளைஞர்கள் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்வுக்காக புதுச்சேரிக்கு முதல் முறையாக வந்துள்ளனர்.

இந்தியாவில் பழங்குடி இனத்தவர்கள் பல்வேறு மொழி, கலாச்சார வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுகின்றனர். இவர்கள் பின்தங்கிய சமூகப் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும், மலைப் பிரதேசங்களிலும் வசித்து வருகின்றனர். நமது அரசியலமைப்புச் சட்ட விதி 342-ன் படி, பழங்குடி மக்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ வாழ குடியரசுத் தலைவர் மூலமாக பொது அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பழங்குடி மக்கள் 10.42 மில்லியனாகவும், நம்முடைய நாட்டின் மக்கள் தொகையில் 8.06 சதவீதமும் உள்ளனர். குணாதிசயங்கள், கலாச்சாரம், வெளித்தொடர்பு ஆகியவற்றில் மற்றவர்களை விடப் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளனர். மேலும் பழங்குடி மக்கள், நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அறிய முடியாமலும், மற்ற மக்களுடன் நேரடித் தொடர்பு இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்.

சுதந்திரம் அடைந்த பிறகு மத்திய மற்றும் மாநில அரசுகள் பழங்குடி மக்கள் நலன் காக்கவும் அவர்கள் வாழ்க்கை முறைகளை வளர்க்கவும் திட்டமிட்டு வருகின்றது. ஆனால் அரசுகள் எதிர்பார்த்தபடி பழங்குடி மக்கள் வளர்ச்சி அடையவில்லை என்று புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகின்றது. எழுத்தறிவின்மை, வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை ஒழிப்பு போன்ற காரணங்களால் பழங்குடி மக்கள் சமூக அந்தஸ்து அடைய முடியவில்லை.

அவர்களுக்கு நல்ல கல்வியை அளித்து மற்ற மக்களோடு வாழவும், பழக்க வழக்கங்களில் உள்ள குறைகளைக் களையவும் பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியை மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நடத்துகிறது. நேரு யுவ கேந்திரா சங்கதன் மத்திய உள்துறை அமைச்சக உதவியோடு இந்த நிகழ்வு நடத்தப்படுகின்றது. இதுவரை 11 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

12-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி புதுச்சேரியில் முதல் முறையாக இன்று (ஜன.20) தொடங்கியுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விழாவைத் தொடங்கி வைத்தார். சத்தீஸ்கர் இளையோருக்கு இந்தி தெரியும் என்பதால் கிரண்பேடி அவர்களுடன் முழுக்க முழுக்க இந்தியில் உரையாடினார்.

நிகழ்ச்சி குறித்து நேரு யுவகேந்திரா சங்கதன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில இயக்குநர் நடராஜ் கூறுகையில், "பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சிக்காக நாடு முழுவதும் 4 ஆயிரம் பழங்குடி இளையோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 20 குழுக்களாக குழுவுக்கு 200 பேர் வீதம் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு மாநிலங்களில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

அதன்படி புதுச்சேரியில் நடக்கும் நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதித்த 4 மாவட்டங்களில் இருந்து 200 பேர் பங்கேற்கிறார்கள். அவர்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் களப்பார்வை இடுகின்றனர். கலை, கலாச்சாரம், கல்வி, வாழ்க்கை முறை, தொழில்முறையைப் பகிர்ந்து கொள்கின்றனர், வரும் 25-ம் தேதி வரை அவர்கள் புதுச்சேரியில் இருப்பர்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x