Published : 20 Jan 2020 12:38 PM
Last Updated : 20 Jan 2020 12:38 PM
அடுத்த ஆட்சிக் காலத்தில் உயர் கல்வியில் கவனம் செலுத்தப்படும் என்று டெல்லி துணை முதல்வர் சிசோடியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ''வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 70 இடங்களிலும் வெற்றிவாகை சூடுவோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லி அரசுப் பள்ளிகளை சீரமைத்துள்ளோம். பல ஆண்டுகளுக்கு முன்னர் மற்ற ஆட்சியாளர்கள் செய்யாததை நாங்கள் செய்திருக்கிறோம்.
டெல்லி அரசுப் பள்ளிகளின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பாராட்டுகள் குவிந்துள்ளன.
மீண்டும் நாங்கள் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், உயர் கல்வியில் கவனம் செலுத்துவோம். பல்கலைக்கழக அளவில், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டியது அவசியம். டெல்லியில் புதிதாக இரண்டு பல்கலைக்கழகங்களை ஏற்படுத்துவோம்.
உயர் கல்வியில் ஐந்து லட்சம் மாணவர்கள் படிப்பதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. எனினும் அவர்களுக்கான போதிய வசதிகள் செய்யப்படவில்லை. எங்கள் ஆட்சி மீண்டும் அமையும் பட்சத்தில் பள்ளிக் கல்வியைப் போல உயர் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்'' என்று சிசோடியா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT