Published : 20 Jan 2020 08:23 AM
Last Updated : 20 Jan 2020 08:23 AM

மதுரை மாவட்ட புத்தாக்க அறிவியல் கண்காட்சி: நாய்ஸ் பள்ளி மாணவிக்கு முதல் பரிசு

மதுரை

மதுரை மாவட்ட புத்தாக்க அறிவியல் படைப்புகள் கண்காட்சியில், நாய்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆ.மதுமிதா முதல் பரிசு பெற்றார்.

மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான புத்தாக்க அறிவியல் படைப்பு கண்காட்சி மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கண்காட்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் தொடங்கிவைத்தார்.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த கண்காட்சியில் மாவட்டம் முழுவதும் உள்ள 73 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த 76 மாணவ, மாணவிகள் தாங்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

இவற்றை டெல்லி அறிவியல் தொழில்நுட்ப அமைச்சக உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் பார்வையிட்டு சிறந்த அறிவியல் படைப்புகளைத் தேர்வு செய்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான இரு சக்கர வாகன சென்சார் கருவியை உருவாக்கிய மதுரை நாய்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளி 10-ம் வகுப்பு மாணவி ஆ.மதுமிதாவுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஆர்.பிரியா, எம்.எம்.குருநாச்சியப்பன் ஆகியோர் இரண்டாம் பரிசும், ஜி.ரக்சிதா, எஸ்.ஜெய் பாரதி, என்.ஹிதாயத் அஷ்மா ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

அவர்கள் மூவருக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் பரிசு வழங்கினார். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ரகுபதி, ஒருங்கிணைப்பாளர் முத்துப்பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x