

கல்வி நிறுவனங்கள் அரசியல் நிழல் உலகமாக மாற அனுமதிக்க முடியாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டு வந்த நபர்கள் மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது.
இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த 35 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை ஏபிவிபி மாணவர்கள் அமைப்புதான் நடத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறும்போது, ''கல்வி நிறுவனங்கள் கல்வியை வழங்குவதாக மட்டுமே இருக்க வேண்டும். அரசியல் நிழலுலக நபர்கள் கூடிப் பேசும் இடமாக கல்வி நிறுவனங்கள் மாற அனுமதிக்க முடியாது.
இதுகுறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக அதிகாரிகளை மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர் சந்தித்துப் பேசுவார்'' என்று தெரிவித்தார்.