Published : 19 Dec 2019 09:04 AM
Last Updated : 19 Dec 2019 09:04 AM

சமூக வலைதளங்களில் பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் வெளியீடு: கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வுவினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 2-ம் பருவத் தேர்வும், 9 மற்றும் 10 -ம் வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வும் டிச. 13-ம் தேதி முதல் டிச.23-ம் தேதிவரை நடக்கிறது. அதேபோல பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குடிச. 11-ம் தேதி முதல் டிச. 23-ம்தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.

இந்தத் தேர்வுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்திலும், ஒரே மாதிரியான வினாத்தாள் மட்டும் இடம்பெற வேண்டுமென அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது. இதற்காக அரசு தேர்வுத்துறை தமிழ் வழி, ஆங்கில வழி வினாத்தாளை ஒரே மாதிரியாக வடிவமைத்து, அச்சகங்களுக்கு நேரடியாக அனுப்பி வினாத்தாள்கள் அச்சடிக்கப்பட்டன.

அவை தற்போது, அந்தந்தமையங்களில் பாதுகாப்பாகவைக்கப்பட்டு, தேர்வு நாளன்றுபள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், சமீபத்தில் 9-ம் வகுப்பு வினாத்தாள் வெளியானதாகப் புகார் எழுந்தது. தற்போது பிளஸ் 2 வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. வேதியியல் தேர்வு நாளை (டிச. 20) நடைபெறுகிறது. அதற்கான வினாத்தாள், 2 நாட்களுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வந்து விட்டது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகங்கை தனியார் பள்ளியிலும், கடந்த கல்வியாண்டில் தேவகோட்டை தனியார் பள்ளியிலும் வினாத்தாள்கள் வெளியாயின. இதனால் சிவகங்கை கல்வித் துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கூறுகையில், தமிழ் பாடத்தில் இருந்து வினாத்தாள்கள் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. ‘ஹலோ ஆப்’ மூலமாகவே வினாத்தாள் வெளியாகிறது. அவற்றை சிலர் பணத்துக்கு விற்கின்றனர். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற ஆசையில், வினாத்தாள் வெளியான விஷயத்தை மாணவர்கள் வெளியே சொல்லவில்லை,’ என்றனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் விசாரித்து விட்டோம். எப்படி வெளியானது என்ற தகவல்எதுவும் கிடைக்கவில்லை. வினாத்தாள் வைக்கப்படும் பள்ளிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x